கேடிசி நகர்: நெல்லை அருகே ஒரு வருடத்திற்கு முன்பு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2019ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கரையிருப்பைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்க நிர்வாகி அசோக் என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தாழையூத்து சிதம்பரநகரைச் சேர்ந்த ராமச்சந்திரபாண்டியன், அவரது பேரன் பேச்சிராஜன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ராமச்சந்திரபாண்டியன் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவு ராமச்சந்திரபாண்டியன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 2 அரிவாள்கள், 4 கதத்ிகள் மற்றும் 3 பயிற்சி துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை நடந்த போது ராமச்சந்திரபாண்டியன் வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர். இதுதொடர்பாக ராமச்சந்திரபாண்டியன், அவரது மகன்கள் குமார், பூல்பாண்டி ஆகியோர் மீது தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.